முகப்பு Uncategorized அமராவதி ஆற்றில் போதிய தடுப்பணை இல்லை வீணாக கடலுக்குச் செல்லும் தண்ணீர்.

அமராவதி ஆற்றில் போதிய தடுப்பணை இல்லை வீணாக கடலுக்குச் செல்லும் தண்ணீர்.

3
0

அமராவதி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படும்போது அதை சேமித்து வைக்க, கரூர் மாவட்டத்தின், ஆற்றுப்பகுதியில் போதிய தடுப்பணைகள் இல்லாததால், தண்ணீர் வீணாக கடலுக்குச் செல்கிறது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள, அமராவதி அணை நீர்மட்டம், 90 அடியாகும். கேரளா மாநிலம் மற்றும் உப நதிகள் ஆன சண்முக நதி, குதிரை ஆறு, உப்பாரு போன்ற பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக, அமராவதி அணைக்கு நீர் செல்கிறது.

பருவமழை, புயல் காரணமாக கடந்த ஜூலை முதல் மாதத்திலிருந்து, அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அமராவதி அணை நிரம்பும் நிலையில், ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், கரூர் மாவட்ட, அமராவதி ஆற்றுப்பகுதிகளில் போதிய தடுப்பணைகள் இல்லாததால், வெள்ளம் ஏற்படும் போது, உபரி நீர் திருமுக்கூடலூர் பகுதியில் காவிரி ஆற்றில் கலந்து வீணாக கடலுக்கு செல்கிறது.

இதனால், கரூர் மாவட்டத்தில், அமராவதி ஆற்றுப்பகுதியில், தடுப்பணைகளை கட்ட வேண்டும். கிளை வாய்க்கால்களை முழுவதுமாக தூர்வார வேண்டும், என விவசாயிகள் எதிர்பார்க்கின்றன. இது குறித்து, கரூர் மாவட்ட அமராவதி ஆற்றுப்பகுதியில் விவசாயிகள் கூறியதாவது, அமராவதி ஆற்றில் தண்ணீர் இல்லாத போது, குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. இதனால், வறட்சியான காலங்களில் அமராவதி ஆற்றுப் பாசன விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. நிலத்தடி நீர் உயர்ந்தால், குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு தீவனப் பயிர் சாகுபடி செய்ய வசதியாக இருக்கும்.

இதற்கு ஒரே தீர்வு, அமராவதி ஆற்றுப்பகுதிகளில் தடுப்பணைகளை கட்டுவதுதான் சிறந்தது. உபரி நீர் செல்லும் போது, கடலில் கலக்க விடாமல் தடுப்பணைகளில் சேமிக்க முடியும். அதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும். அதை பயன்படுத்தி, விவசாயிகள் வறட்சி காலங்களை சமாளிக்கலாம். பல ஆண்டு கோரிக்கைக்குப்பின், அமராவதி ஆற்றின் குறுக்கே, கடந்த அ.தி.மு.க., ஆட்சியின் போது, பெரியாண்டாங் கோவில் தடுப்பணை கட்டியுள்ளனர்.

அதேபோல், ராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், கூடுதலாக தடுப்பணைகளை புதிதாக கட்ட வேண்டும். போதிய தடுப்பணைகள் இல்லாததால், கடந்த ஒரு மாத காலமாக அமராவதி ஆற்றில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர், வீணாக காவிரி ஆற்றின் வழியாக கடலுக்குச் செல்வது வேதனையாக உள்ளது. இவ்வாறு விவசாயிகள் கூறுகின்றன.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்