கரூர் அருகே சிவபுரீஸ்வரர் கோயிலில் அழியும் தருவாயில் இருந்த 25 ஆயிரம் சுருள் ஓலை சுவடிகளை தொகுத்து, ரசாயனக் கலவை பூசும் பணியில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன குழுவினர் ஈடுபட்டிருந்தனர். குளித்தலை அருகே உள்ள சிவாலயத்தில் ஆயிரத்து, 400 ஆண்டுகள் பழமையான சிவபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பெரியநாயகி உடலுறை சிவபுரீஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோவில் பிரதோஷத்திற்கென்றே கட்டப்பட்டதாகும். பாடல் பெற்ற இக்கோயிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனம் மிகவும் பிரசித்தி பெற்றது. பழமையும், பெருமையும் வாய்ந்த இக்கோயிலில் சமீபத்தில் சுமார் 25, ஆயிரத்திற்கும் மேற்பட்ட, சுருள் ஓலைசுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அக்கோவிலில் வைக்கப்பட்டிருந்தது .
மிகப் பழமையான கோயில்களில் உள்ள ஓலைச்சுவடிகளை ஒன்று திரட்டி அவற்றின் வரலாற்று உண்மைகளை அறிய குழு அமைக்க உத்தரவிட்டிருந்து. இதனை அடுத்து, இந்து அறநிலை துறை சார்பில் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ் இலக்கிய சுவடிகள் புலம் துறையில் 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவில் உள்ள ஆறு பேர் கொண்ட குழு கோவிலில் இருந்த சுருள் ஓலை சுவடிகளை ஒன்று திரட்டி, இதனை சுத்தம் செய்து, ரசாயன கலவைகள் பூசி, தொகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அவற்றில் உள்ள வரலாற்றுப் பதிவுகள் கணினி மூலம் பதிவிறக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு கணினி மயமாக்கும் பட்சத்தில், கோவில் வரலாறு, பூஜைகள், இலக்கியங்கள் உள்ளிட்ட வரலாற்று பதிவுகளை அனைவரும் அறிய முடியும் கூறப்படுகிறது.