முன்னாள் அமைச்சரும், மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். கையில் அரிக்கேன் விளக்கை ஏந்தியும், இனி இதன் விற்பனை சூடு பிடிக்கும் எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஊடகங்கள் திமுக அரசுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. டெல்லி சென்ற முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமரை சந்திக்கவில்லை என செய்திகளை வெளியிடுகிறார்கள் என்றார். பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்தால் திமுக பயப்படுகிறது. மின் கட்டண உயர்வை நியாயப்படுத்தி வருகிறார்கள்.
மின் கட்டண உயர்வுக்கு மத்திய அரசு மீது பழியை போடுகிறார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு சொத்து வரி, மின் கட்டண உயர்வை தொடர்ந்து அடுத்தாக விரைவில் பேருந்து கட்டணமும் உயரும். நிச்சயமாக அடுத்ததாக பேருந்து கட்டணம் உயரும் என்றார். நம்ம ஊர் அமைச்சர் மின் கட்டணத்தை உயர்த்தி விட்டார். அடுத்து ஸ்மார்ட் மீட்டர் பொறுத்துகிறோம் எனச் சொல்லி கொள்ளையில் ஈடுபடுவார். பொய்யை மட்டுமே எழுதிய கலைஞரின் பேனாவிற்கு கடலில் சிலை வைக்க வேண்டுமா என்றார்.

தமிழகம் முழுவதும் தற்பொழுது தமிழக அரசு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. கடந்த மூன்று வருடமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிறு, குறு தொழில்கள் நசிந்து ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டண உயர்வு குறித்து அறிவித்த மின்துறை அமைச்சர் சம்மந்தமே இல்லாமல் மத்திய அரசின் அழுத்தத்தின் காரணமாக மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாகவும், தமிழ்நாடு மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையமே மின் உயர்வுக்கு காரணம் என்றும் ஒரு காரணம் சொல்லி மின்சார கட்டணத்தை உயர்த்தி ஏழை, எளிய, நடுத்தர மக்களை இந்த அரசு வாட்டி வதைக்கிறது என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

கரூர் பேருந்து நிலையம் அருகே முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மின்கட்டண உயர்வை கண்டித்து அறிக்கேன் விளக்குடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அதிமுக பொறுப்பாளர், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது, அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.