கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுங்ககேட் பகுதியில் கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் தலைமையில், பசுபதிபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார், தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சாலை விபத்தில் தலைக்கவசம் அணியாமல் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்த, அரசு ஊழியர்கள் உட்பட அனைத்து தரப்பினர்களும் ஏப்ரல்18ம்தேதி முதல் தலைக்கவசம் அணிந்துதான் இரு சக்கர வாகனத்தை ஓட்ட வேண்டும். மேலும், தலைக்கவசம் அணியாமல் பெட்ரோல் பங்க், டாஸ்மாக் போன்ற பகுதிகளுக்கு சென்றாலும் ஒத்துழைப்பு வழங்க கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் ஏற்கனவே அறிவித்திருந்தார். பொதுமக்களிடம் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் “தலை காக்கும் இயக்கம்” என்ற விழிப்புணர்வு இயக்கம் கரூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரின் அதிரடி உத்தரவு காரணமாக அரசு ஊழியர்கள் அனைவரும் இரண்டு சக்கர வாகனங்களில் வரும் போது, தலைக்கவசம் அணியாமல் வரக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளதால், 90 சதவீத ஊழியர்கள் தலைக்கவசம் அணிந்து அலுவலங்களுக்கு செல்கின்றனர்.