கும்பகோணம் அருகே,
திருவிடைமருதூர் தாலுக்கா திருப்பனந்தாள் ஒன்றியம் காகிதப்பட்டறை முதன்மை சாலையில் சில நாள்களுக்கு முன்பு அரசு புறம்போக்கு இடத்தில் மூன்றுமுகம் கொண்ட ஆஞ்சனேயா் சிலை அமைக்கப்பட்டது.

இதை அப்புறப்படுத்த கோரி, திருவிடைமருதூர் வட்டாட்சியா், சுசிலாவிடம் மற்றும் கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமாவிடம் பல்வேறு தரப்பினரும் புகார் செய்தனா்.

இதைத்தொடா்ந்து, பந்தநல்லூா் காவல் நிலையத்தினா் முன்னிலையில், நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் மூன்று முகம் கொண்ட ஆஞ்சனேயா் சிலையை அப்புறப்படுத்துவதற்காக சென்றனா். அப்போது, ஜேசிபி இயந்திரம் மூலம் ஆஞ்சனேயா் சிலைக்கு அமைக்கப்பட்டிருந்த மேற்கூரை அகற்றப்பட்டது.

இதனிடையே, அங்கு வந்த சில பெண்கள் சிலையை எடுக்க வேண்டாம் என தடுத்தனா். மேலும், 10 நாள்கள் அவகாசம் கொடுத்தால் அகற்றிக் கொள்வதாகவும் கூறினா். இதையடுத்து, சிலையை அகற்றும் பணியை அலுவலா்கள் தற்காலிகமாக கைவிட்டனர். இதனால், இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.