கரூர் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தொகுதி 2-க்கான தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
கரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – 2-க்கான (நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) (தொகுதி -2 மற்றும் தொகுதி 2A) பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வு இன்று 21.05.2022 நடைபெற்றது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் கரூர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 59 மையங்களில், கரூர் கோட்டத்தில் 13,883 தேர்வர்களும், குளித்தலை கோட்டத்தில் 3,228 தேர்வர்களும் மற்றும் இதர 3 தேர்வர்களும் மொத்தம் 17,114 தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 2452 தேர்வர்கள் தேர்வு எழுத வரவில்லை. மொத்தம் 14,662 தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள். தேர்வர்கள் தேர்வு எழுத ஏதுவாக அனைத்து தேர்வு மையங்களிலும் சுகாதாரம், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள் மற்றும் மின்வசதி, போதிய காற்றோட்ட வசதி, கரூர் மற்றும் குளித்தலை பேருந்து நிலையத்திலிருந்து தேர்வுக் கூடங்களுக்குச் செல்ல போதிய பேருந்து வசதி போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் ஒரு முதன்மை கண்காணிப்பாளர் வீதம் 59 முதன்மை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வுமையத்ததை கண்காணிப்பு பணிக்காக துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் தலைமையில் 8 பறக்கும்படை குழுக்களும், தேர்வுமையங்களுக்கு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை வழங்க ஏதுவாக 15 நடமாடும் குழுக்களும் மற்றும் தேர்வு நடவடிக்கைகளை கண்காணிக்க ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் 101 ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அனைத்து தேர்வு மையங்களின் பாதுகாப்பு பணிக்காக போதிய காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுளளனர். மேலும், தேர்வு நடவடிக்கைகளை பதிவு செய்ய ஏதுவாக ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் வீடியோ பதிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தெரிவித்தார்கள்.