மஞ்சள் தமிழர்களின் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. சிறந்த மருத்துவ பொருளாகவும், கிருமி நாசினியாகவும் இருக்கும் மஞ்சள்களுக்கு நம் கலாச்சாரத்தில் சிறப்பான இடம் உண்டு. காரணம் இது மகாலட்சுமி அம்சமாக மங்கலம் தரும் பொருளாக பார்க்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையின் போது தவிர்க்க முடியாத பொருளும் இதுதான். பொங்கல் திருநாளில் புது பொங்கல் பானையில் மஞ்சள் கிழங்கை கட்டுவது காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் மங்கல நடைமுறை. இப்படி செய்தால் வீட்டில் செல்வமும் மகிழ்ச்சியும் பெருகும் என்பது ஐதீகம். தமிழகத்தின் சில பகுதிகளில் பொங்கல் பானையில் கட்டப்படும் மஞ்சள் கிழங்கை பத்திரப்படுத்தி வைப்பார்கள். மறுநாள் குடும்பத்தின் பெரியவர்கள் அந்த மஞ்சள் கிழங்கை கீறி சிறியவர்களின் நெற்றியில் வைத்து ஆசீர்வதிப்பார்கள். இந்த வழக்கம் “மஞ்சள் கீறுதல்” என்று அழைக்கப்படுகிறது