கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்திலிருந்து தலைகவசம் அணிவதன் அவசியம் குறித்த இரண்டு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் துவக்கிவைத்து கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தார்.

இப்பேரணியில் தலைக்கவசம் அணிந்து சென்றால் விபத்தில் பாதிப்பு ஏற்படாது. தலைக்கவசம் அணியாமல் சென்றால் எவ்வாறு பாதிப்படையும் என்பதை காட்சிப்படுத்தும் விதமாக மாறுவேடம் அணிந்து இருசக்கர வாகனத்தில் அமர்ந்து இளைஞர் ஒருவர் கலந்து கொண்டார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தது
கரூர் மாவட்டத்தில் இருசக்கர வாகன விபத்தில் சிக்குபவர்களின் உயிரிழப்பை தவிர்ப்பதற்காக தலைக்கவசம் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி – வருகின்ற 18.04.2022 தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். அவ்வாறு அணியாதவர்களுக்கு மோட்டார் வாகன சட்டப்படி அபராதம் விதிக்கப்படும்.

மேலும், அரசு அலுவலகங்கள், பெட்ரோல் பங்குகள், நியாய விலைக்கடைகள், அரசு மதுபானக் கடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அவர்களுக்கு சேவை நிறுத்தப்பட உள்ளது. எனவே, அனைத்து இருசக்கர வாகன ஓட்டிகளும், அதன் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் தலைக்கவசம் அணிந்து தங்களது விலைமதிப்பற்ற உயிரை காப்பாற்றி தங்களது குடும்பத்தாரின் எதிர்காலத்தையும் காப்பாற்ற வேண்டும்.

எனவே, அனைவரும் தலைக்கவசம் அணிந்து வாகனங்களை ஓட்டி சாலைவிபத்தில் உயிர் இழப்பு இல்லா கரூர் மாவட்டத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தெரிவித்தார்.