வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் குறுநிதி நிறுவனங்கள் தங்கள் சேவைக்காக பெரும் வட்டி தொகைக்கு சேவை வரியில் இருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சீட்டு நிதி நிறுவனங்கள் அளிக்கும் சேவைக்கான ஊதியமாக பெறப்படும் கமிஷனுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு இப்போது வரை அமலில் உள்ளது. இந்த 12 சதவீத வரியை முற்றிலும் எடுக்க வேண்டும் என்று சிட்பண்ட்ஸ் சங்கங்கள் சார்பில் மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசு இந்த 12 சதவீத சேவை வரியை 18 சதவீதமாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால் சிட்பண்ட்ஸ் தொழில் முற்றிலும் பாதிப்படையும். கரூர் மாவட்டத்தில் மட்டும் 100 சிட்பண்ட்ஸ் நிறுவனங்கள் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு முறையாக செயல்படுகிறது. ஆண்டிற்கு குறைந்தது ரூ.100 கோடிக்கு பணம் கொடுக்கல், வாங்கல், சேமித்தல் என்ற வகையில் வர்த்தகத்தை நடத்துகின்றனர். சிட்பண்ட்ஸ் தொழில் சார்ந்து மட்டும் 20 ஆயிரம் பேர் பயன் பெற்று வருகின்றனர்.

புதிய வரி ஏற்றத்தால் சிட்பண்ட்ஸ் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை குறையும், சேமிப்பு குறையும். உரிய நேரத்தில் உரியவர்கள் பண தேவையை பெற இயலாத நிலை ஏற்படும். இதனால் சிறு, குறு தொழில் சார்ந்தவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். வெளியில் அதிக வட்டிக்கு பணம் பெற வேண்டிய நிலை ஏற்படும். எனவே இதிலிருந்து விடுபட மத்திய அரசு சேவைக்கு ஏற்கனவே விதித்துள்ள 12 சதவீத வரியை முற்றிலும் நீக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் இப்போது ஏற்றுவதாக அறிவித்துள்ள கூடுதல் 6 சதவீத வரியையாவது ஏற்றாமல் விட வேண்டும் என்றார்.